Sunday, June 26, 2011

சுதந்திர அணிவகுப்பு நெல்லையில் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு முடிவு


                 பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட்15, 2011 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட்டின்... சுதந்திர தின அணிவகுப்பினை திருநெல்வேலியில் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 

தீர்மானங்கள்:

1. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 3 வருடங்களாக ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின கொண்டாட்டங்களையும், சுதந்திர தின அணிவகுப்பையும் (FREEDOM PARADE) நடத்தி வருகின்றது. இந்த வருடம் ஆகஸ்ட்15, 2011 அன்று சுதந்திர அணிவகுப்பை நெல்லையில் நடத்துவது எனவும், சுதந்திர தின கொண்டாட்டங்களை நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

2. முஸ்லிம்களின் உரிமையான இடஒதுக்கீடு முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப வழங்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் பல கருத்தரங்குகள் மற்றும் போராட்டங்களை நடத்தி அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசிடம் தமிழக முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

3. கல்வி இன்று வியாபாரமயமாகிவிட்டது. அனைவரும் அறிந்த உண்மை இது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதும், எல்.கே.ஜி. யில் குழந்தைகளை சேர்ப்பதும் ஒன்றாகி விட்டது. பள்ளிக்கட்டணங்களை முறைப்படுத்துவதற்கு கடந்த கால அரசு நியமித்த கோவிந்தராஜன் குழு பள்ளிக்கட்டணங்களை முறைப்படுத்தியது.அதில் குளறுபடிகள் இருப்பதாக புகார் வந்ததின் அடிப்படைடியில் மீண்டும் நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு அமைக்கப்பட்டு கட்டணங்கள் மறு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மறு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விபரம் தொடர்பாக அரசும், தனியார் பள்ளிகளும் எந்த விபரத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதும், மாணவர்களை துன்புறுத்துவதும் தினசரி செய்தியாகி விட்டது. இது விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு பள்ளிக்கட்டணத்தை சீர்செய்து அதனை பின்பற்றாத பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து மாணவர் நலன் காக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

4. கோவையில் கடந்த 2006 ம் ஆண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது போடப்பட்ட வெடிகுண்டு பறிமுதல் வழக்கு, உளவுத்துறை ஏ.சி. ரத்தினசபாபதியின் நாடகம் என்பதும், அது முற்றிலும் அப்பட்டமான பொய் வழக்கு என்றும் அதில் உள்ள ஆவணங்கள் காவல்துறையினராலேயே போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும் சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வுக் குழு கோவை ஏழாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த 2007ம் ஆண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.

சிறப்புப் புலனாய்வு குழுவால் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏ.சி. ரத்தினசபாபதி மற்றும் உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது முந்தைய தி.மு.க. அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தண்டனை பெற்று தந்திருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கைக்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி, அதன் பிறகு கடந்த மாதம் எஸ்.பி. என பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வை கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஏ.சி. ரத்தின சபாபதிக்கு தமிழக அரசு வழங்கியது நடுநிலையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், ஏ.சி. ரத்தின சபாபதி கடந்த தி.மு.க. அரசால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

            அநீதி இழைக்கப்பட்டு 5 வருடங்களை கடந்தும் பொய்வழக்கால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை; பொய் வழக்கு புனைந்த அதிகாரிகள் மீது எந்த விதமான நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை. எனவே, தமிழகத்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் அ.தி.மு.க. அரசு உடனடியாக இது விஷயத்தில் தலையிட்டு ஏ.சி. ரத்தின சபாபதிக்கு வழங்கப்பட்ட இரண்டு பதவி உயர்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமெனவும், டி.என்.பி.எஸ்.சி, உறுப்பினர் பதவியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

                  மேலும், எஸ்.ஐ.டி. சமர்பித்துள்ள இறுதி அறிக்கையின் அடிப்படையில் ஏ.சி. ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு துணை புரிந்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களுக்கெதிரான கிரிமினல் வழக்கை நடத்துவதற்காக சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்து அரசே அவ்வழக்கினை நடத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது

No comments:

Post a Comment