Thursday, September 22, 2011

தடை செய்யப்பட்ட தீமைகள் - பகுதி 2

11) சமாதி வழிபாடு!

யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!” (அல்-குர்ஆன் 7:194)
12) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!

“உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!” (அல்-குர்ஆன் 108:2)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக!” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

13) அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்தல்!

“இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்” (அல்-குர்ஆன் 2:270)

“அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர், (அதை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடுவாராக! அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதை நிறை வேற்றி) அவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்: ஆயிஷா – ரலியல்லாஹூ அன்ஹு. ஆதாரம் : புகாரீ, அஹ்மது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா
14) இறைவனல்லாத பிறரை (அவுலியா, இறைநேசர்கள் போன்றவர்களை) அழைத்து உதவி தேடுதல்!

“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)

“அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகின்றானோ அவன் நரகில் நுழைவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

15) அல்லாஹ் அல்லாதவர் ஹலாலை ஹராமாக்குவதையும் ஹராமை ஹலாலாக்குவதையும் ஏற்றுக்கொள்ளுதல்!

“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக்

கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?” (அல்-குர்ஆன் 10:59)

அதிய்யி பின் ஹாதிம் – ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம், வேதக்காரர்களான) ‘அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும், தங்களுடைய சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்’ (9:31) என்ற பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு, ‘நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன் அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அ(ந்தக் குருமார்களான)வர்கள் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி, அதனால் நீங்கள் அதை ஹராமாக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி, அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?’ எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். (ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது.
16) தொழுகையை விட்டுவிடுதல்!

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)
17) தொழுகையில் பொடுபோக்காக, அலட்சியமாக இருத்தல்!

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)


அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)
18) அவசர அவசரமாக தொழுதல்!

“முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)

“ருகூவை பூரணமாக செய்யாத, ஸஜ்தாவை மிக குறுகிய நேரத்திலும் செய்த ஒருவரைப் பார்த்து, “இந்த நிலையிலேயே தொழக்கூடியவர்கள் இறக்க நேரிட்டால், அவர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு மார்க்கத்தை நிலைநாட்டியவராகத்தான் மரணிப்பார்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
19) அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்!

“அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவர் இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ஸலி), ஆதாரம் : அபூதாவுத், அஹ்மத். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.
20) வேண்டுமென்றே ஜமாஅத் தொழுகையை தவறவிடுதல்!

நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment