Saturday, November 10, 2012

கோலாகலமாக நடக்கும் 31-வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி!

ஷார்ஜா:ஷார்ஜாவில் 31-வது புத்தகக் கண்காட்சி நவம்பர் 7-ம் தேதி துவங்கியது. ஷார்ஜா ஷேக் ஸுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி இந்தக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பல நாடுகளின் பதிப்பகங்கள் பங்குபெறும் இந்தக் கண்காட்சியில் இந்திய பதிப்பகங்கள் அதிக ஸ்டால்களைப் போட்டுள்ளதால் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியுள்ளது.

ஷார்ஜாவின் கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சகம் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 7 முதல் 17-வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 924 பதிப்பகங்கள் பங்குபெற்றுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் முதல் 26 வரை நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் 42 நாடுகளிலிருந்து 720 பதிப்பகங்கள் கலந்து கொண்டன. ஆனால் இந்த முறை 20 நாடுகளும், 204 பதிப்பகங்களும் அதிகபடுத்தபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அல் தாவூன் மாலுக்கு அருகிலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வைத்து நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மொத்தம் 40,000 பார்வையாளர்களும், 10,000 மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு நூற்களின் விலையில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும்.
வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் எகிப்து கலாசார அமைச்சர் முஹம்மத் ஸபீர் அரப், அல்ஜீரியாவின் பிரபல நாவலாசிரியர் அஹ்லாம் முஸ்தகன்மி, எகிப்தின் பிரபல நகைச்சுவையாளர் ஆதில் இமாம், பிரபல நடிகர் யஹ்யா அல் ஃபக்ரானி உட்பட பல அரபு பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகள் செலிபரேஷன்ஸ் ஹால், புக் ஃபோரம், லிட்டரரி ஃபோரம், கல்ச்சுரல் ஹால், தாட் ஹால் ஆகிய இடங்களில் நடைபெறும்.

பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர் வாஸி ஷாஹ் உட்பட பலர் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், வில்லியம் டால்ரிம்பிள் உட்பட பல எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர். அத்தோடு இந்திய நடிகர்கள் அனுபம் கெர், தீப்தி நாவல், பங்கஜ் மிஷ்ரா, ஹெச்.எம். நக்வி, பால் ஸகரியா, வித்யா ஷாஹ் உட்பட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர்.

எழுத்தாளர் அருந்ததி ராயின் புகழ் பெற்ற நூலான ‘The God of Small Things’ என்ற நூலைக் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 9-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொள்கிறார் என்று பிரபல மலையாளப் பதிப்பகமான டிசி புக்ஸ்-ன் தலைமை நிர்வாகி ரவி கூறினார்.

கடந்த 9-ம் தேதி வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வமாகப் புத்தகங்களை வாங்கினர். அரபுலகின் பிரசித்தி பெற்ற தாருஸ்ஸலாம் பதிப்பகத்தின் ஸ்டாலில் நல்ல பல ஆங்கில, அரபி நூற்கள் உள்ளன. மலையாள பதிப்பகங்கள் அதிகமாகப் பங்கெடுத்துள்ளதால் இந்தியன் பெவிலியனில் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தியன் பெவிலியனில் ஹால் எண்:5-ல், ஸ்டால் எண்:7-லுள்ள மலையாளப் பதிப்பகமான தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் தமிழ் பதிப்பகமான இலக்கியச்சோலையின் தமிழ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இஸ்லாத்தின் அடிப்படையில் நேர நிர்வாகம் குறித்து முதன்முதலில் தமிழில் வெளிவந்துள்ள நூலான “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” மற்றும் “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “கோவை:போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்”. “மனதோடு மனதாய்”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்”, “இப்பி பக்கீர்” முதலான இலக்கியச்சோலை பதிப்பகத்தின் தமிழ் நூல்கள் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இலக்கியச்சோலை பதிப்பகத்தின் காப்பாளர் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் அப்பதிபகத்தின் ஸ்டாலை பார்வையிட்டார். தங்களது வெளீயீடுகள் பற்றியும், இப்பொழுது தயாராகி கொண்டிருக்கும் புதிய புத்தகங்கள் பற்றியும் அங்கிருந்த பார்வையாளர்களுடன் உரையாடினார்.

நமது தூது நிருபர்களுடன் ஒருசில நிமிடங்கள் கலந்துரையாடினார். அதில் இலக்கியச்சோலை பதிப்பகம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு “இலக்கியச்சோலை என்பது தமிழ் கூறும் நல் உலகின் வாசகர்களுக்கு ஒரு விடியல். மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறுகளை தோண்டியெடுப்பதும், சத்தியத்திற்காய் உழைத்த மாவீரர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படை அம்சங்கள், உண்மையின் பிம்பங்களை உலகிற்கு உரைப்பது தான் இலக்கியச்சோலை என்றார்.

இம்மாபெரும் கண்காட்சியில் பங்குபெறும் ஒரே தமிழ்பதிப்பகம் இலக்கியச்சோலை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment