Thursday, November 1, 2012

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அவசியம் – மத்திய அமைச்சர் ரஹ்மான் கான்!

புதுடெல்லி:பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களை தழுவிய தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று ரஹ்மான் கான் பி.டி.ஐ செய்தி ஏஜன்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியது: “இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே நிவாரணம் அல்ல. இருப்பினும் அது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையாகும். 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு அரசு தரப்பின் சட்ட நடைமுறை வீழ்ச்சிகளை பிரதிபலிக்கிறது.

நீதிமன்ற தீர்ப்பு உள் ஒதுக்கீட்டை நிராகரிக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்கள் யார்? என்பதை தீர்மானிக்கும் அளவுகோல் திருப்தி அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரிவான ஆய்வின் அடிப்படையிலேயே கர்நாடகா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தெரிவுச் செய்யப்பட்டனர். இதனடிப்படையில்தான் கர்நாடகா மாநிலத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான உச்சநீதிமன்றம் மற்றும் ஆந்திரமாநில உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு காரணமானது சில சட்ட நடைமுறை தவறுகளாகும்.

எனது அமைச்சகம், இரண்டு தீர்ப்புகள் குறித்தும், நாட்டின் சமூக-பொருளாதார பிற்படுத்தப்பட்ட நிலைமைக் குறித்து  அறிவியல் பூர்வமாக ஆராயும். இந்தியாவில் வக்ஃப் போர்டுகளின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவர குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடரில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்.” இவ்வாறு ரஹ்மான் கான்  கூறினார்.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முஸ்லிம்களை தொடர்ந்து வெறுப்பேற்றி வரும் இடஒதுக்கீடு குறித்த வெற்று வாக்குறுதிகளின் பட்டியலில் புதிதாக மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள ரஹ்மான் கானின் பேட்டியும் இடம் பிடிக்குமா? என்பது அவரது தொடர் நடவடிக்கைகளை பொறுத்தே அமையும்.

No comments:

Post a Comment