Thursday, July 21, 2011

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக சிறுபான்மை துறை அமைச்சருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆலோசனை

               முஸ்லிம் சமுதாயத்தின் நியாயமான பிரச்சனையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் சிறுபான்மை துறை அமைச்சர் சல்வாம் குர்ஷித் அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனைகள் முடிவுக்கு வந்துவிட்டது, அனைத்து அமைச்சரகம், அரசு நிறுவனத்தின் இறுதி ஆலோசனையை கேட்ட பின்பு உள்துறை அமைச்சகம் இறுதி அறிக்கையை சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது என அமைச்சர் சொன்னதை கடிதம் எடுத்துக்காட்டியுள்ளது.
               பாப்புலர் ஃப்ரண்டின் முழக்கம் மற்றும் ஆலோசனை இந்த நாட்டில் வாழ்ந்து வரும் எல்லா முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதை உள்ளடக்கியதாகும். அதே சமயத்தில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளது பாப்புலர் ஃப்ரண்ட். இ.எம் அப்துர் ரஹ்மான் அவர்களின் கடிதத்தின் சாராம்சம்,


1. எல்லா மாநிலங்களிளுள்ள அனைத்து முஸ்லிம்களையும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (SEBC) என்றோ அல்லது ஒட்டுமொத்தமாக இதர பிற்படுத்தப்பட்ட (OBC) வகுப்பினர் என்றோ அறிவிக்க வேண்டும்.


2. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையின்படி மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் இதர மத சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசு ஆணையைக் கொண்டு மத்திய அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


3. பணி நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கையின் போது முஸ்லிம் இட ஒதுக்கீட்டில் வரக்கூடியவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டவர்களை விட முஸ்லிம்களாக வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.


4. அரசியல் சாசன பிரிவு 341, 1950 சட்ட திருத்தத்தின்படி தலித்துகளுக்கு இணையான தொழில்புரியும் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், பட்டியல் வகுப்பினரின் மொத்த இடஒதுக்கீட்டை விகிதாச்சாரத்திற்கேற்றாற் போல் மேம்படுத்த வேண்டும்.


5. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பட்டியலில் இருந்து பிரித்து முஸ்லிம்களுக்கு 10% தனி இட ஒதுக்கீடு தர வேண்டும். 27% உள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் முஸ்லிம்கள் சேர்க்கப்பட்டால் முஸ்லிம்களின் விகிதத்திற்கு ஏற்றாற் போல் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.


6. அதிகரிக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட (OBC Quota ) வில் முஸ்லிம்கள் சேர்க்கப்ட்டால் கேரளா, கர்நாடகத்தில் பின்பற்றப்படுவதைப் போல் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ரோஸ்டர் சுழற்சி அடிப்படையில் சேர்க்கையும், பணி நியமனமும் அமைய வேண்டும்.


7. இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் 50% உச்சவரம்பை தமிழகத்தில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டைப்போல் சட்ட திருத்தங்கள் (சட்டமன்ற நடவடிக்கைகள்) மூலம் சரிசெய்யலாம்.


ஏற்கனவே இருக்கக்கூடிய 49.5% இட ஒதுக்கீட்டில் (sc/st 22.5% and obc 27% ) புதிய 10% முஸ்லிம் இட ஒதுக்கீட்டை இணைக்க இது அவசியம்.


27% இருக்கும் ஓ.பி.சி பட்டியலை அதிகரிக்காமல் தற்போது ஓ.பி.சி பட்டியலில் இல்லாத முஸ்லிம்களை அந்த பட்டியலில் இணைக்க முயற்சி செய்தால் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும்; இது முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு உகந்த சூழலை ஏற்படுத்தாது என்று பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவிலும் அவர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் முஸ்லிம் என்று புதிய பிரிவை இணைத்தாலும் இதே பிரச்சனைதான் ஏற்படும் எனபதையும் சுட்டிக்காட்டினார்.


எனவே இடஒதுக்கீட்டிற்கான அடுத்த கட்ட போராட்டத்தை, இப்பிரச்சினையில் ஆர்வமுள்ள பிற சமுதாய மற்றும் சமூக இயக்கங்களுடன் இணைந்து நடத்த வேண்டும் என சமீபத்தில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment