Monday, July 11, 2011

சமச்சீர் கல்வியில் உருது, அரபு மொழி பாதுகாக்கப்பட வேண்டும் : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

                                "உருது, அரபு மொழியை பாதுகாக்கும் வகையில், சமச்சீர் கல்வி அமைய வேண்டும்'' என, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், ஜவாஹிருல்லா பேசினார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க் களுக்கு பாராட்டு விழா சென்னை, எழும்பூரில் நேற்று நடந்தது. இதில், இந்திய கம்யூ., கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேசும்போது,"மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரை வைத்ததற்கு, என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலோடு பணிகள் நிற்கவில்லை. இனிதான் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது. ஆட்சி மாற்றத்தால் மிகப்பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அமைச்சரவையில் மட்டும் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது' என்றார்.
              
               மார்க். கம்யூ., கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேசுகையில், "சிறுபாண்மை சமுதாய பிரச்னைகளுக்கு, எங்கள் கட்சி தொடர்ந்து போராடும். சட்டசபையில் மனித நேய மக்கள் கட்சிக்கு உறுதுணையாக இருப்போம்' என்றார். அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலர் அன்வர் ராஜா பேசும்போது, "அமைச்சர்கள் முறையாக செயல்படவில்லை என்ற காரணத்தினால் தான், அமைச்சரவையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. அமைச்சரவை மாற்றம் மூலம், பணிகள் வேகமாக நடக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தை போல், அதிகாரிகளை எங்கள் கட்சிக்காரர்கள் மிரட்டுவது இல்லை' என்றார்.

             இந்நிகழ்ச்சியில், ஜவாஹிருல்லா பேசியதாவது: கடந்த 16 ஆண்டுகளாக, த.மு.மு.க., வில் பணியாற்றிய தொண்டர்களால், தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில், தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற, எங்கள் உணர்வை, அ.தி.மு.க., தலைமை ஏற்றது. சட்டசபையில், தமிழக மக்களுக்காக, தொடர்ந்து எங்கள் கட்சி, குரல் கொடுக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, இஸ்லாமிய சமுதாயத்தினர் அதிகம் பேர், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, இடம் வழங்கப்பட்டுள்ளது.உருது, அரபு மொழியை பாதுகாக்கும் வகையில், சமச்சீர் கல்வி அமைய வேண்டும். இதற்காக, பள்ளி கல்வித் துறை அமைச்சரை சந்திந்து மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு ஜவாஹிருல்லா பேசினார்.


இந்நிகழ்ச்சியில், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் தாவூத் மியான்கான், மனித நேய மக்கள் கட்சியின், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா, பொதுச் செயலர் ஹைதர் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment