Thursday, August 11, 2011

சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் புகார் மனு

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் முஸ்லிம்களை இழிவுபடுத்தியும் கட்டுரை எழுதிய சுப்பிரமணிய சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று (08.08.2011) பிற்பகல் தமிழக காவல் துறை தலைமை இயக்குனரிடம் (டி.ஜி.பி) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் எம்.முஹம்மது ஷேக் அன்ஸாரி அவர்கள்  புகார் அளித்துள்ளார்கள். அதன் பிறகு அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

"கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி டி.என்.ஏ பத்திரிக்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை துடைத்தெறிவது எப்படி? ஒரு பகுப்பாய்வு" என்ற தலைப்பில் முஸ்லிம்களை இழிவுபடுத்தியும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கட்டுரை எழுதியுள்ளார். அதன் ஒரு சில பகுதிகளை நான் இங்கே கோடிட்டு காட்டுகின்றேன்.

"எந்த ஒரு முஸ்லிம் அவரது மரபு வழி இந்து மதம் என ஒப்புக்கொள்கிறாரோ அப்பொழுது தான் அவரை நாம் அகண்ட இந்து சமூகத்தின் அதாவது ஹிந்துஸ்தானின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள முடியும். ஹிந்துஸ்தான் என்ற பாரதம் இந்துக்களுக்கு சொந்தமானது மற்றும் யாருடைய மூதாதையர்கள் ஹிந்துக்கள் என்று பெருமையுடன் கூறுவார்களோஅவர்களுடையது; யார் இதனை ஏற்க மறுக்கிறார்களோ அல்லது வெளி நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறி பதிவு செய்து கொண்டதன் மூலம் இந்திய குடி மக்களாக ஆனார்களோ, அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்க முடியும், ஆனால் அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது (அதாவது. அவர்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட மக்கள் பிரதி நிதிகளாக ஆக முடியாது)

ஒரு சிறிய தீவிரவாத தாக்குதல் நடை பெற்றாலும் தேசம் உடனடியாக பெருமளவில் பழிக்கு பழி வாங்க வேண்டும். எடுத்துக்காட்டாக அயோத்தியாவில் உள்ள கோவில் தாக்கப்பட்ட போதும் நாம் அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டி பதிலடி கொடுத்திருக்க வேண்டும்.

காசி விஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள பள்ளி வாசலை அகற்ற வேண்டும்; மேலும் அதைப்போல மற்ற கோவில் அருகில் உள்ள 300 பள்ளி வாசல்களையும் அகற்ற வேண்டும்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; சம்ஸ்கிருதத்தை பாடமாக்க வேண்டும்; வந்தே மாதரம்  பாடுவதை கட்டாயமாக்கவேண்டும்; இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்; அதில் இந்து அல்லாதவர்கலை தங்களுடைய மூதாதையர்கள் இந்துக்கள் என பெருமையுடன் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்கள் ஓட்டுப்போட முடியும். இந்தியாவை ஹிந்துஸ்தான் என்ற இந்து நாடாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.உலகில் இந்தியாவிற்கு என்று ஒரு பெருமை உண்டு. பல்வேறு மத, இன, கலாச்சார மொழிகள் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டக்கூடிய அனைவருக்கும் சம உரிமை வழங்க்கக்கூடிய பெரிய மதச் சார்பற்ற ஜனநாயக நாடு என்பதுதான் அது.

ஆனால இவை அனைத்திற்கும் வேட்டு வைக்கக்கூடிய விதமாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இரு சமூகங்களுக்கிடையே வெற்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும், இந்திய தேசத்தில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை இழிவுபடுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும் மேற்படி கட்டுரையை எழுதியதன் வாயிலாக சுப்பிரமணிய சுவாமி வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

ஆகவே இப்படிப்பட்ட கட்டுரையை எழுதியதன் மூலம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967 பிரிவு 13(1)(அ) மற்றும் (ஆ), இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 124(அ), 153(அ), 295(அ) மற்றும் 505 ஆகியவற்றின் கீழ் குற்றம் புரிந்தவராகிறார். ஆகவே சட்டரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாநில செயலாளர் அன்ஸாரி அவர்கள் தனது புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுஃப் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் ஷாஹித் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment