Sunday, December 18, 2011

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக வி.எச்.பி பிரச்சாரம் செய்ய திட்டம்

பிற்படுத்தப்பட்டோர்களுக்கான (ஒ.பி சி) 27 % இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பான வி.எச்.பி திட்டமிட்டுள்ளதாக கடந்த வெள்ளியன்று தெரிவித்துள்ளது.

ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக வி.எச்.பியின் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.
வி.எச்.பியின் மூன்று நாள் கூட்டம் கடந்த வெள்ளியன்று தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஏற்கனவே கேரளா,ஆந்திரா, தமிழ் நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மத ரீதியிலான இட ஒதுக்கீடு அமலில் இருப்பதாகவும் அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் சமீபத்தில் முஸ்லிம்களுக்கு 6% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனை வி.எச்.பி முழுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வி.எச்.பி. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எந்த முறையில் இடஒதுக்கீடு வழங்குவதையும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தாங்கள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அளிக்க நினைக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment