Saturday, December 24, 2011

ஒ.பி.சி இடஒதுக்கீடு:அரசு தீர்மானம் குறித்து அரசியல் கட்சிகளிடையே முரண்பாடு

அரசு வேலை வாய்ப்புகளில் தற்போதைய 27 சதவீத ஒ.பி.சி(இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்) ஒதுக்கீட்டில்4.5 சதவீதம் சிறுபான்மையின மக்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
 
பா.ஜ.கவும்,ராஷ்ட்ரீய ஜனதா தளமும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியும், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸ் அறிவித்துள்ள ஒ.பி.சி உள் ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவிக்கையில், ’இது வெறும் பெயரளவில் மட்டுமே ஆகும். இடஒதுக்கீட்டின் சதவீதத்தை உயர்த்த வேண்டும்’ என கூறியுள்ளன. அதேவேளையில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரசு நடவடிக்கையை வரவேற்றுள்ளது. ’அமைச்சரவையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது’ என அக்கட்சி கருத்து கூறியுள்ளது.

பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான அனந்தகுமார் கூறுகையில், ’அரசு வேலைவாய்ப்பிலும், உயர் கல்வியிலும் இடஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு செய்வது தவறானது. கட்சி இதனை எதிர்க்கும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்கவேண்டும். அவர்கள் சக்திப்பட வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் நிலைப்பாடு’ என அவர் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கூறுகையில், ’அரசின் தீர்மானம் ஏமாற்று மோசடி ஆகும். சிறுபான்மையினருக்கு குறைந்த 18 சதவீதம் இட ஒதுக்கீடாவது வழங்க வேண்டும். எனது பரிந்துரை அரசியல் ஆதாயத்திற்காக அல்ல’ என அவர் கூறியுள்ளார்.

அதேவேளையில்,லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளார்.

No comments:

Post a Comment