Sunday, October 9, 2011

ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?

நண்பர்களே,
 
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையிலிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல் குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பைக் கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அப்சல் குருவின் பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது.
மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்றுகூட இல்லாத நிலையில்தேசத்தின் மனசாட்சியை திருப்திப் படுத்துவதற்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதைப் பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.. அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாகத் தூக்கிலிட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.
 
இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். ஒருவேளை அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலிடப்பட்டால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும். இதற்காக மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் கொஞ்சம் தயங்குகின்றன. ஆனால் காஷ்மீரத்திற்கு வெளியே இது மக்கள் போராட்டமாக பரிணமிக்கவில்லை என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் அப்சல் குருவின் நியாயத்திற்காகத் தங்களது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்,
 
- வினவு
oOo
என்.டி.பஞ்சொலி,
வழக்கறிஞர், ஜி 3/617 ஷாலிமார் கார்டன் விரிவாக்கம் 1
ஷஹிபாபாத், காஜியாபாத் (.பி) 201005

ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?


முகமது அப்சல் குருவின் வழக்கறிஞர் என்ற அடிப்படையிலும், கூடவே மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையிலும், நான் இத்துடன் அப்சல் குரு விடுத்த அறிக்கை நகலை இணைத்துள்ளேன்.
 
இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டது என்பது கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த இயலாத செயல் என்பதிலும் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஆனால் அந்தக் குற்றம் குறித்த மொத்தப் புலனாய்வு நடைபெறும் வழிமுறையில், விதத்தில் பல கேள்விகள் முன் நிற்கின்றன.  மேலும் எவ்வாறு துவக்க நிலை விசாரணையே துவங்காத நிலையில் மின்னணு ஊடகங்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதுபோல் சித்தரித்து அவரை கொன்றேயாக வேண்டும் எனுமளவிற்கு எவ்வாறு ஒலிபரப்ப இயலும்?
 
மேலும் மீண்டும் ஒரு பயங்கரமான குண்டு வெடிப்புச் சம்பவம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 7 செப் 2011-ல் நடைபெற்று பல உயிர்கள் பலியான சில மணிகளில், அப்சல் குருவின் பெயர் இதில் இழுக்கப்பட்டிருக்கிறது.  ஊடகங்கள் மின்னஞ்சல் ஒன்றைக் குறிப்பிட்டு அதன் உண்மைத் தன்மை நிறுவப்படாத சூழலிலேயே, முக்கியமான நேரடி ஒலி/ஒளி பரப்புகளில் குண்டுவெடிப்பு என்பது அப்சல் குருவிற்கு ஆதரவாக உள்ள குழுவினால் ஏற்பட்டதுபோல் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
 
கார்ப்பரேட் ஊடகங்கள் என்பது யாருக்கும் கட்டுப்படாத ஒன்றாகும்.  மேலும் 24 மணி நேர தொலைக்காட்சி ஒளிபரப்புகளை மேற்கொள்கிற அத்தகைய ஊடகங்களின் செயல்பாடு, அடிப்படையான பத்திரிகை தர்மத்தை மீறுகிற செயல்களைத் திறம்படக் கண்காணிக்க அதிகார அமைப்பு ஏதுமில்லை. அத்தகைய ஊடகங்களில் நடைபெறுகிற அனைத்து விவாத நிகழ்ச்சிகளும், நிலைத்திருக்கக் கூடிய கருத்திற்கு முரணாக யார் ஒருவர் மாறாகக் கருத்துச் சொன்னாலும் அதை எதிர்த்து மிகுதியான கருத்துத் திணிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. மின்னணு ஊடகங்களெல்லாம் மிக உரக்க ஊழலுக்கு எதிராகப் பேசிய போதிலும், எந்தவிதப் பொறுப்புமின்றி அதிகாரத்தோடு அத்தகைய ஊடகங்கள் தாம் செய்து வரும் ஊழலை ஒருபோதும் உணர்ந்து பார்ப்பதில்லை.
 
ஊடகத்தின் முன்பாக யாரேனும் அப்சல் குருவுக்குச் சாதகமாகப் பேசினால் அவர் இந்தியனுக்கெதிராகப் பேசுபவர் எனவும், தேசிய பாதுகாப்பு வல்லுனர்கள் சொல்லும் தேசப்பற்று என்பது நிலையாக நிற்கக் கூடிய கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் மற்றும் இந்து மத உரிமை பேசுபவர்களுக்கு மட்டுமே உரித்தானதும் போல் சித்தரிக்கப்படுகிறது.
 
நமதுஅப்சல் குருவைக் காப்பாற்றுங்கள் என்கிற பிரச்சாரம் இந்திய ஜனநாயகத்தில் கீழ்காணும் அம்சங்களைப் பிரதிபலிக்கிறது:
 
புலனாய்வு அமைப்புகளில் நிலவி வரும் ஊழல் மற்றும் அவர்களிடம் தொழில் திறமை குறைவாக இருப்பது அம்பலப்படுத்தப்படுகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் புலனாய்வு அதிகாரியாகச் செயல்பட்டவர் பலமுறை புகழ்ந்து பேசப்பட்டார்.  ஆனால் பின்னர் கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் அவருக்கிருந்த நிழலான மோசமான தொடர்புகள் காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் சிறப்புப் பிரிவில் செயலாற்றும் காவலர்களின் ஊழல்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடலாம்.


நீதித்துறை என்பது அரசியலமைப்புச் சட்ட நிலை, மற்றும் சட்ட நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஊடகங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக உச்ச நீதிமன்றம்இந்த நாட்டின் தேசிய மனச்சாட்சியை திருப்திப் படுத்துவதற்காக தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்துகிறது. எந்த ஒரு நபரின் இறப்பு குறித்த தண்டனையை முடிவு செய்யும் சட்ட அடிப்படை இங்கு கிடையாது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அது எந்த ஒரு இந்தியனும், இந்தியாவுக்கு உரிமை கொண்டாடும் குழுக்களை அல்லது கார்ப்பரேட் நலனை திருப்திப் படுத்துவதற்காக தூக்கிலிடப்படலாம் என்றாகிவிடும்.


நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் திட்டத்தின் பிரதம மூளை என்ற அடிப்படையில் மெளலானா மசூத் அசார்,காஜிபாபா மற்றும் தாரிக் அகமது என்ற 3 பாக்கிஸ்தானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றக் குறிப்பாணை பதிவு செய்யப்பட்டது.  அத்தகைய பிரதம மூளையாக செயல்பட்டவர்கள் பிடிக்கப்படவில்லை.  கொலை நடவடிக்கையில் நிதர்சனமாக ஈடுபட்டவர்கள் இறந்து விட்டனர்.  எனவே சதிச்செயலில் ஒரு பங்கு அப்சலுக்கு உண்டு எனக் கருதப்படினும் அவருக்குத் தலைமை தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்படக் கூடாது. ஏனெனில் அவர் குறிப்பிட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்படவும் இல்லை, தாக்குதலில் ஈடுபடவும் இல்லை.  அப்சலைத் தூக்கிலிடுவதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு என்பதும், தீவிரவாதத்திற்கு உண்மைக் காரணம் என்னவென்று கண்டறியும் நடவடிக்கையும் புறந்தள்ளப்பட்டுவிடும்.


மனித உரிமை ஆர்வலர்கள் இது தொடர்பாகக் கைதான இருவர் ஒன்றும் அறிந்திராதவர்கள் என நிரூபித்துள்ளனர்.  இதில் கருவுற்றிருந்து சிறையில் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு சீக்கிய பெண்ணும் அடக்கம். அவளது வாழ்வு முழுமையாக பழிவாங்கப்பட்டுவிட்டது.  நாம் ஒருபோதும் அவளைத் தொலைக்காட்சிகளில் கண்டதில்லை, என்பதுடன் அவளின் பயங்கரமான சோகமயமான வாழ்க்கையையும் கண்டதில்லை.  இது எவ்வாறு சில குடிமக்கள் கைவிடப்படுகிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது.
டெல்லியிலும் நாட்டின் பிற பகுதியிலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நியாயமாக ஒன்றுபட்ட ஆதரவு காண்பிப்பதை காஷ்மீர மக்கள் பார்க்கின்றனர்.  அப்சலைத் தூக்கிலிடுவதென்பது அத்தகைய காஷ்மீர மக்களுக்கும், இதர இந்தியப் பகுதி மக்களுக்கும் இடையே நிலவிவரும் உணர்வு பூர்வமான பாலம் உடைந்துவிட ஏதுவாகும்.


அப்சல் குருவிடம் ஒருபோதும் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. மேலும், அவருக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராக முன்வராததால், அவர் வழக்கறிஞர் மூலம் தனது தரப்பைத் தெரிவிக்க இயலவில்லை. மிக முக்கியமான சாட்சியங்கள்கூட குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அப்சலைத் தூக்கிலிடுவதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒவ்வொருவருக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ள நியாயமான விசாரணை என்ற உரிமையை நாம் குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும்.


நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கின் முழுமையான அனுபவம் என்பது நமது ஜனநாயக நிறுவனங்களின் பலவீனத்தைக் காட்டுவதாக உள்ளது. அதேசமயம் அது குறிப்பிட்ட சில மெனக்கெடும் ஆர்வலர் குழுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜனநாயக உரிமைக்காகப் போராடத் துணிந்தால் அதற்கு இடமளிப்பதும் சாத்தியப்படும் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அந்த இடம் என்பது குற்றத் தீர்ப்பிற்குள்ளாகிவிடும்.  இந்துத்வா தீவிரவாதிகள் வெடிகள் வெடித்துக் கொண்டாடலாம், கார்ப்பரேட் ஊடகங்களுக்குச் சில தினங்களுக்குத் தொடர்ந்து ஒலிபரப்ப நாடகக் காட்சிகள் கிடைக்கலாம். ஆனால் இந்திய ஜனநாயகம் என்பது வெடித்துச் சிதறுவதாக ஆகிவிடும். எனவேதான் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது.
நான் இத்துடன் அப்சலின் பத்திரிகைச் செய்தி அறிக்கை நகல் ஒன்றை இணைத்துள்ளேன்.  அவர் வேண்டுகையின்படி அது பிரசுரிக்கப்பட்டால் அவர் மீது தவறான கருத்துக் கொண்டிருக்கும் மக்களில் பலர் அவரின் குரலைக் கேட்க முடியும்.


- என்டி பஞ்சொலி,  வழக்கறிஞர், 09 செப் 2011

oOo


அப்சல் குருவின் பத்திரிகை செய்திக் குறிப்பு:
 
சில தீய சக்திகள் மற்றும் சமூக விரோத நபர்கள் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கடுங்கொடிய மற்றும் பதைபதைக்க வைக்கும் குண்டு வெடிப்பு என்ற சம்பவத்தை மேற்கொண்டிருப்பது மிகவும் கவலைப்படக் கூடிய செயலாகும்.  அந்தக் கொடுஞ்செயல் அனைவராலும் கண்டிக்கத்தக்க செயலாகும்.  எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களைக் கொல்வதை அனுமதிப்பதில்லை.  எனது பெயரை இதில் சம்பந்தமில்லாமல், தேவையில்லாமல் இழுத்தடிப்பது அறிந்து நான் மிகவும் துயருற்றுள்ளேன்.

சில தரகர்கள்/குழுக்கள் அசிங்கமான ஆட்டத்தை ஆடி என் பெயரை இதில் ஈடுபடுத்துகின்றனர்.  மிகக்கொடுமையான குற்றங்கள் நடைபெறும் போது சில தவறான நோக்கமுள்ள குழுக்கள் என் பெயரை வேண்டுமென்றே இழுப்பது என்பது இது முதல்தடவையல்ல. எப்போதெல்லாம் நாட்டில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் என் பெயரை வேண்டுமென்றே அடிபடச் செய்வதன் மூலம் என் மீது களங்கம் விளைவிக்கவும், எனக்கு எதிரான பொதுக் கருத்தை வலுப்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.
 
நான் இதை எனது வழக்கறிஞர் திரு என்.டி பஞ்சொலி மூலம் எனது பத்திரிகை செய்திக் குறிப்பாக அனுப்பியுள்ளேன்.  தயவு செய்து இதைப் பிரசுரிக்கவும்.
 
(-ம்) அப்சல் குரு
/பெ: அபிபுல்லா
பகுதி எண் 8, சிறை எண் 3
திஹார் சிறைச்சாலை
 



No comments:

Post a Comment