Sunday, November 20, 2011

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்!

மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மின்சார கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என தெரிகிறது.

சாதாரண பேருந்து முதல் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் வரை அனைத்து பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று காலை முதல் அதிரடியாக அமுலுக்கு வந்துள்ளது.

சென்னையில் நகர பேருந்துகளில் குறைந்த கட்டணமாக 3 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மற்ற கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 6 மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 970 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. சென்னை தவிர மற்ற நகரங்களில் தினமும் 4 மணி நேரம், கிராமங்களில் 5 மணி நேரம் மின்வெட்டு மின்வெட்டு அமலில் உள்ளது.

கூடுதல் மின்சாரம், மண்ணெண்ணெய், மீனவர் மேம்பாட்டுக்கு நிதி ஆகியவை கேட்டு பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டது. மனு குறித்து திட்டக்குழு முடிவு எடுக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இருப்பினும் எந்த உதவியும் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.

அதே சமயம், மேற்கு வங்க அரசுக்கு  ரூ21,614  கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் அரசுகளை மத்திய அரசு புறக்கணிப்பது தெரிகிறது.

இந்த நிலையில் திவாலாகும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம்  ரூ40,659 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி. மின்சாரம் விற்றவர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்க வேண்டியது 10,000 கோடி. அரசின் மொத்த கடன் ஒரு லட்சத்து ஆயிரத்து 349 கோடியுடன், மின்வாரிய கடன் 53,000 கோடியை ஒப்பிட்டால், வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெரியும். இதற்கு மேலும் வாரியத்திற்கு அளிக்க அரசிடம் பணம் இல்லை.

இதே போன்றுதான் அரசு போக்குவரத்து கழகங்களின் நிலையும் உள்ளது. டீசல், உதிரி பாகங்கள் வாங்கவும், விபத்து நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்கள் பிடித்து வைத்துள்ள வாகனங்களை விடுவிக்கவும், ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் இயலாத சூழ்நிலையில் போக்குவரத்து கழகங்கள் ஸ்தம்பித்து விட்டன. அவற்றின் சொத்துக்கள் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. டயர், டியூப், உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ6,150  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்படும். இதே போன்று ஆவின் நிலைமையும் மோசமடைந்துவிட்டது. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத நிலையில் ஆவின் உள்ளது. கொள்முதல் செய்யும் ஒவ்வொரு லிட்டருக்கும் நான்கு ரூபாய் அளவுக்கு ஆவின் நஷ்டத்தை சந்திக்கிறது. 

சிந்திக்கவும்: தமிழகத்தின் மின்சாரத்தை மற்றைய மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு தமிழக மக்களை மின்வெட்டில் ஆழ்த்துவதும், தமிழக வளங்களை எல்லாம் சுரண்டி விட்டு தமிழக மேன்பாட்டுக்கு உதவாமல் தமிழகத்தை புறக்கணிப்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருபவை. வெள்ளையன் தமிழகத்தை கொள்ளையடித்ததை விட இந்தியா தமிழகத்தில் நடத்தியே கொள்ளையே அதிகம். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்தி  இந்தியாவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டாள் மட்டுமே நாம் வளம் பெற முடியும். தமிழர்கள் சிந்திப்பார்களா?
 
  *மலர்விழி*

No comments:

Post a Comment