Friday, November 25, 2011

பி.ஜே.பி. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது மக்களை ஏமாற்றும் வேலை

SDPI யின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:-

“பாரதிய ஜனதா கட்சி ஊழலுக்கும், கருப்புப் பணத்திற்கும் எதிராக குரல் கொடுப்பதாக காட்டி நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்கி வருகிறது. இது வரும் நாடாளுமன்றத் தேர்தலை காரணமாக வைத்து நடைபெறும் ஏமாற்று வேலையே தவிர வேறில்லை.

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் தொலை தொடர்பு துறையில் பல்லாயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தற்போது சி.பி.ஐ யின் விசாரணை வளையத்தில் உள்ளது. எடியூரப்பாவின் ஊழல்களால் கர்நாடகம் நாறிக் கொண்டிருக்கிறது. சவப்பெட்டி ஊழல் முதல் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க கையூட்டு பெற்றது வரை பி.ஜே.பி யினர் செய்த ஊழல்கள் எண்ணற்றவை.

பி.ஜே.பி ஆட்சி செய்த காலத்தில் கருப்பு பணத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆட்சி செய்த போது சும்மா இருந்துவிட்டு இப்போது “குய்யோ முறையோ ”என சப்தமிடுவது நாடகமே தவிர வேறில்லை.

தற்போது 12 க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் சங்பரிவார்களுக்கு உள்ள தொடர்வை வெளிப்படுத்தி காவி பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தை குறிவைத்து நாடாளுமன்றத்தை பா.ஜ.க வினர் முடக்கி வருகின்றனர். இதற்கு ஊழல் காரணமல்ல. சங்பரிவார்களின் சதியை அம்பலப்படுத்தி விட்டாரே என்ற கோபம் தான் காரணம்.

தமிழகத்திலும் பி.ஜே.பி. யினரின் நாடகம் அம்பலமாகி வருகிறது. தமிழகத்தில் பேருந்துக்கட்டணம், பால் விலை உயர்வை அறிவித்த அதிமுக அரசை எதிர்த்து போராட்டம் என அறிவித்துவிட்டு இடையில் பி.ஜே.பி க்கும் அதிமுக விற்கும் பாராளுமன்றத்தை முடக்குவதில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதால் தமிழகத்துக்கு நிதியளிக்க மறுக்கும் “மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்” என தலைப்பை மாற்றி நாடகமாடியுள்ளனர்.

எனவே ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரானவர்கள் என்ற முகமூடியுடன் மக்களை ஏமாற்றும் பி.ஜே.பி யை மக்கள் அடையாளம் கண்டு தகுந்த பாடத்தை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment