Wednesday, November 9, 2011

அமீரகத்தில் EIFF நடத்திய பெருநாள் சந்திப்பு & விளையாட்டு தின விழா

அமீரகத்தில் பல்வேறு சமூக நல பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) தியாகத் திருநாளை முன்னிட்டு பெருநாள் சந்திப்பு மற்றும் விளையாட்டு தின விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த தினமான 07.11.11 திங்கள் அன்று ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்வில் கால் பந்தாட்டம், கபடி, ஓட்டப்பந்தயம், கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கால் பந்து, கபடி ஆகிய போட்டிகளில் இறுதியாக வென்றவர்களுக்கும், இரண்டாவது இடத்தை பிடித்தவர்களுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

தேரா, பர்துபாய், ஷார்ஜா, சோனாப்புர், அபுதாபி, ICAD ஆகிய அணிகள் கால் பந்து, கபடி, கயிறு இழுத்தல் மற்றும் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்துகொண்டன. சுறுசுறுப்பாகபும், விறுவிறுப்பாகவும்நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இறுதியில் ஷார்ஜா அணி கால்பந்து கோப்பையைத் தட்டிச் சென்றது. அபுதாபி அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.

கால்பந்து போட்டியில் சிறந்த ஆட்டக்காரர் பரிசை அபுதாபியின் ஜுனைத் வென்றார். கபடி போட்டியில் சிறந்த ஆட்டக்காரர் விருதை பர்துபாயின் ஜமால் வென்றார்.
கபடிப் போட்டியில் பர்துபாய் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது. ஷார்ஜா அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.
ஓட்டப் பந்தயப் போட்டியில் அபுதாபியைச் சேர்ந்த ராஜா ஹுசைன் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். தேரா அஜீப், அபுதாபி ஃபர்ஹான் ஆகியோர் இரண்டாவது, மூன்றாவது பரிசுகளைப் பெற்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் அபுதாபி அணி வென்றது.
இதல்லாமல் பார்வையாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி, சிறுவர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
காலை 8 மணிக்கு ஆரம்பித்த போட்டிகள் மாலை 5.30 மணி வரை தொடர்ந்தன. மஃக்ரிப் இடைவேளைக்குப் பிறகு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பரிசளிப்பு விழாவில் சென்ட்ரல் ஸ்கூல் தலைமையாசிரியர் முஹம்மத் அப்துர் ரஹ்மான், ETA MBM பிரிவின் பொது மேலாளர் ஷாகுல் ஹமீத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவர்கள் போட்டியாளர்களை வாழ்த்திப் பேசியதுடன், போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினர்.

மொத்த நிகழ்ச்சியையும் சகோ. M.S. அப்துல் ஹமீது அவர்கள்தொகுத்து வழங்கினார். EIFF பற்றிய அறிமுக உரையை சகோ. செய்யது அலீ அவர்கள் நிகழ்த்தினார். EIFF அமீரகத்தில் செய்து வரும் பல்வேறு சமூகநலப் பணிகள் குறித்து அவர் விவரித்தார். இறுதியாக சகோ. இம்ரான் அவர்கள் நன்றியுரை நவின்றார்.
எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் இந்த நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதன் தன்னார்வச் செயல்வீரர்கள் சுழன்று சுழன்று சேவைகள் புரிந்தனர்.

அமீரகத்தின் பல பாகங்களிலிருந்தும் பொதுமக்கள் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய திருப்தி அவர்களின் முகங்களில் தெரிந்தது.

No comments:

Post a Comment